அனைத்திந்தியப் படமாக உலகெங்கும் பல மொழிகளில் வெளியீடு கண்டுள்ள இப்படத்தில் அன்றைய தமிழர்களின் கோயில், குடியிருப்பு உணவு, பானங்களையும் காட்டி தமிழின் தனிச் சிறப்பைக் காட்டியிருக்கலாம். ஒரு பொதுத்தன்மையே அவற்றில் இருந்தது.
நாவலின் சுருக்கத்தையும் கதைக் களத்தையும் வரைபடம் வழியாக படத்தின் தொடக்கத்தில் கூடுதலாக விவரித்திருந்தால் நாவலைப் படிக்காதவர்களுக்கு கதையைப் புரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கும். பார்வையாளர்கள் நாவலின் கதைச் சுருக்கத்தையாவது படித்துவிட்டுச் சென்றால் படத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு பார்க்க முடியும்.
கல்கியின் நாவல், பாகுபலி போன்ற படங்கள் ஆகியவற்றுடன் ஒப்பீடுகளைச் செய்யாமல் இருந்தால் உலகப் பெரும் மன்னர்களில் ஒருவனான ராஜராஜ சோழனின் சிறுவயதுக் கதையை உலகத்துக்கு எடுத்துச் சொல்லும் பொன்னியின் செல்வன் சிறந்ததொரு படம்.
70 ஆண்டுகளுக்குப் பிறகு கல்கியின் நாவலுக்கு புத்துயிர் ஊட்டி, உலகெங்கும் வாழும் தமிழர்களை மீண்டும் தமிழ் வாசிக்க வைத்திருப்பது இப்படத்தின் மற்றொரு வெற்றி. சோழரின் புலிக்கொடியை உலகமெங்கும் பெரும் வரவேற்புடன் பறக்கவிட்டிருப்பது தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம் ஆகிய இருவரின் மாபெரும் முயற்சி.
எனினும், தமிழர் சிறப்பை தமிழரும் உலகமும் அறியச் செய்வது இலக்கென்றான் அதை இப்படம் அடையவில்லை என்றே சொல்ல வேண்டும்.
கிட்டத்தட்ட 430 ஆண்டுகள் தமிழகத்தின் நிலப்பரப்புகளுக்கும் அப்பால், கடல்கடந்தும் விரிந்திருந்த பிற்காலச் சோழ வல்லரசின் தொடக்ககால கதை. தமிழரின் ஆடல், பாடல், ஓவியம், கட்டடக் கலைகள் சிறந்திருந்த காலம்.
குடத்துக் ஓலையில் பெயர் எழுதிப் போட்டு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குடவோலை முறைமூலம் உலகத்திற்கு வாக்குச்சீட்டு முறையை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்கள். கல்லணையும் வீராணம் ஏரியும் கட்டி, மிகச் சிறந்தொரு நீர்பாசன முறையை
உருவாக்கியவர்கள். வீரமும், கலைகளையும், அறிவும் நிர்வாகமும் சிறந்து தழைத்திருந்த தமிழரின் சிறப்பைச் சொல்லாலோ, காட்சியாலோ காட்ட இந்தப் படம் முனையவில்லை.
கதையைச் சொல்லிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலிருந்த படக்குழுவினர் தங்கள் வேரையும் அடையாளத்தையும் காட்சியாகப் பார்த்துப் பூரிக்க வரும் மக்களை மறந்துவிட்டார்கள்.
புலவர்களையும் சமயக்குரவர்களையும் கலைஞர்களையும் அறிஞர்களையும் போற்றி வளர்த்தவர்கள் தமிழ் மன்னர்கள். பழைய கருப்பு வெள்ளைத் தமிழ்ப் படங்களில் வருவதுபோல் இப்பெருமக்களை ஒரு காட்சியிலாவது அரசவையில் அமரவைத்து அழகுபார்த்திருக்கலாம். ஆதித்த கரிகாலனின் போர் வெறியையும் குடியாட்டத்தையும் காட்டியவர்கள், பொன்வேய்ந்த அவனது காஞ்சி மாளிகையையும் காட்டியிருக்கலாம்.
புத்தரின் பிரம்மாண்டத்தைக் காட்டியதுபோல், சோழர்களின் மாடக்கோயில்களையும் கற்கோயில் சிறப்புகளையும் காட்டியிருக்கலாம். பல கோயில்களை எழுப்பிய செம்பியன் மாதேவியின் சிவ வழிபாட்டைக் காட்டியிருக்கலாம். திருமுறையில் இடம்பெற்றிருக்கும் கண்டராதித்தின் ஒரு பாட்டைச் சொல்லியிருக்கலாம். கட்டியவீட்டுக்குக் குறைசொல்வது நோக்கமல்ல.
சினிமா எனும் பெரும் சக்தி வாய்ந்த ஊடகத்தில் வாரதுவந்த மாமணிபோல பல ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழரின் வரலாற்று பேசப்படும்போது, அது தமிழ் மக்களையும் மற்றவர்களையும் அசைத்துப் பார்க்கத் தவறிவிட்டதோ என்ற ஆதங்கம்தான். வழக்கம்போல இது மணிரத்னம் படம் என மௌனமாகப் போய்விட முடியவில்லை.
துணைப் பாத்திரங்களைப் போலவே, முக்கிய பெண் பாத்திரங்கங்களும் மாநிறத் தமிழ் முகங்களாக இருந்திருந்தால் படம் இன்னொருபடி உயர்ந்திருக்கும். பாண்டியர்களுக்கு கருப்பும் சோழர்களுக்கு வெள்ளையும் என்பது போன்ற குறியீடுகள் பொருந்தாதவை. படத்தில் சீனர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரலாற்றுக்கு மாறாக சற்று அதிகமாகவே உள்ளது. இதை ஒரு கற்பனைகள் நிறைந்த கதையின் திரைப்படமாக ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். உண்மை வரலாறாக உணர்ச்சி பொங்கத் தேவையில்லை.
இப்படத்தின் வர்த்தக வெற்றி, மேலும் பல தமிழ்க் கதைகள் பெரும் திரைப்படங்களாக வழிவகுக்கும். இதன்மூலம் தமிழ் சினிமாவும் தமிழ்ச் சிந்தனையும் வளர்ச்சியைக் காணும்.
ரூ.450 கோடி, 120 நாள்கள்
தமிழ்ச் சினிமாவின் அண்மைய பிரம்மாண்டப் படைப்புகளைத் தயாரித்துள்ள லைக்கா நிறுவனம்தான் 'பொன்னியின் செல்வன்' படத்தையும் தயாரித்துள்ளது.
இப்படத்தின் மொத்த செலவு 450 கோடி ரூபாயில் அடங்கிவிட்டது என்று கூறப்படுவது ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் அசர வைத்துள்ளது.
120 நாள்களில் மொத்த படத்தையும் இரு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். 'பாகுபலி' படத்துக்கு இதைவிட அதிக செலவும் காலமும் ஆனதாக சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் நேற்று 'பொன்னியின் செல்வன்' படம் வெளியீடு கண்டது. முதல் நாள் வசூல் ஐம்பது கோடி ரூபாய் என்கிறார்கள்.
முதல் பாகத்தின் மொத்த வசூல் 700 கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகமும் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

