தமிழ் சினிமாவில் முன்னணிக் கதாநாயகனாக வலம் வரும் நடிகர் விஷால், முதன்முறையாக இயக்குநராக அவதாரமெடுத்துள்ள ‘மகுடம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாகவே, பிரபல நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் விஷாலுக்கு உண்டு.
‘மகுடம்’ படத்தை ஆரம்பத்தில் ரவி அரசு இயக்கத் தொடங்கினாலும், சில காரணங்களால் படப்பிடிப்பு பாதியிலேயே முடங்கியது. இதையடுத்து, திரைக்கதையின் பொறுப்பைத் தனது தோள்களில் சுமந்து, இயக்குநராகப் படத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார் விஷால்.
படம் வெளியானதையொட்டி சமூக வலைதளத்தில் உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
“நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். சவால்கள் அதிகமாகும்போது இன்னும் உயர்ந்து நிற்பேன். திரையுலகிலும் சமூகத்திலும் என்னை வாழ வைக்கும் ரசிகர்களைக் கடவுளுக்கு நிகராகவே கருதுகிறேன். எனது 35 வருடக் கால கனவு இன்று நனவாகியுள்ளது
“ஏனெனில், தயக்கமோ வெட்கமோ இன்றி என்னால் கண்ணாடியைப் பார்த்து நிற்க முடியும். நான் எனது வேலையை மன உறுதியோடும் விடாமுயற்சியோடும் மனபலத்தோடும் செய்கிறேன்.
“ஒரு நடிகனாக எனது ரசிகர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன்.
“‘மகுடம்’ படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குனராக உங்கள் அனைவரின் முன் வந்து நிற்கிறேன். என் பணியை முடித்துவிட்டேன். உலகளாவிய திரையரங்க வெளியீட்டின் மூலம் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கக் காத்திருக்கிறேன். காட்சிகள் தொடங்கின, கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார் விஷால்.
இப்படத்தில் விஷால் பல வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார். அவரது ரசிகர்கள் அவரது நடிப்பை சமூக ஊடங்களில் பாராட்டி வருகின்றனர்.


