தமிழ்த் திரைப்படக் கலைஞர்களைக் கொண்டாடும் ‘ஆனந்த விகடன் திரைப்பட விருதுகள் 2025’ விழா அண்மையில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை ‘டிராகன்’, ‘டியூட்’ ஆகிய படங்களுக்காகப் பிரதீப் ரங்கநாதன் வென்றார்.
விருதைப் பெற்றுக்கொண்ட அவர், “நான் நடிக்க வரும்போதே நமக்கு விருதுகள் எல்லாம் கிடைப்பது ரொம்ப சிரமம் என்று நினைத்துக்கொண்டேன். ஏனெனில், நான் நடிப்பது எல்லாம் வணிக ரீதியிலான படங்கள்.
“அதைத் தாண்டி இங்கு இருக்கக்கூடிய திறன்பெற்ற கலைஞர்களுக்கு நடுவில் நமக்கு எல்லாம் எப்படி விருது கிடைக்கும் என்பதும் எனக்குத் தெரியும்.
“லவ் டுடே’ படத்தில் நடிக்கும்போது மட்டும் சிறந்த அறிமுக நடிகருக்கான விருது கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், அதற்குக் கிடைக்கவில்லை.
“எனினும், இந்த ஆண்டு எனக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. அதுவும் ஒரு படத்துக்கு அல்ல. இரண்டு படங்களுக்கு.
“வாழ்க்கையில் நாம் போடும் கணக்கு சரியாக அமையாமல் போனாலும், வாழ்க்கை நமக்காகப் போடும் கணக்கு ஒரு நல்ல இடத்தைக் கொடுக்கும். அதனால் ஏதாவது உங்களது இலக்கு தவறிப் போனாலும் மனம் தளர வேணாம். கண்டிப்பாக ஒருநாள் கிடைக்கும்,” என்று பேசினார்.


