மிக விரைவில் அண்டார்டிகா பனிப்பகுதியில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாகத் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.
அந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என நம்புவதாகவும் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறாராம்.
இயக்குநர் ராஜமௌலி தற்போது ‘வாரணாசி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பெரும் பொருள்செலவில் பிரம்மாண்டப் படைப்பாக உருவாகி வரும் இப்படத்தில் மகேஷ் பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகளை அண்டார்டிகா கண்டத்தில் படமாக்க விரும்புகிறார் ராஜமௌலி. இதற்காக அவர் பல்வேறுவிதமான அனுமதிகளைப் பெற வேண்டியுள்ளது.
மேலும், உயிரை உறைய வைக்கும் பனியில் படப்பிடிப்பு நடத்துவது லேசுப்பட்ட காரியமல்ல. எனவே, பெரும் செலவுக்கும் தயாராக வேண்டியுள்ளது. எனினும், எப்படியாவது எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிடலாம் என்று தனது குழுவினரிடம் நம்பிக்கையூட்டி உள்ளார் ராஜமௌலி.
அண்டார்டிகாவில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான குறிப்புகளும் விதிமுறைகளும் கொண்ட கையேடு ஒன்றைத் தயாரித்து, படக்குழுவினருக்கு அளித்துள்ளாராம்.
அனைவரும் அதை மனப்பாடம் செய்யும் நிலையில், மிக விரைவில் படக்குழு அண்டார்டிகா புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு நடந்தால், அங்கு நடக்கும் முதல் இந்தியப் படத்துக்கான படப்பிடிப்பாக இது இருக்கக்கூடும்.

