சங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித்தொகுப்பு (டீசர்) ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இப்படத்தில் பல்வேறு அதிரடி வசனங்கள் இடம்பெற்றுள்ளனவாம். வேட்டி கட்டிக்கொண்டும் கல்லூரி மாணவர் போன்றும் மேற்கத்திய உடையுடனும் பல தோற்றங்களில் காட்சியளிக்கிறார் ராம் சரண்.
‘பொதுவாக ராம் போன்று நல்லவன் எவனும் இல்லை, கோபம் வந்துவிட்டால் அவனைப்போல் கெட்டவன் யாரும் இல்லை’ என்ற ‘பஞ்ச்’ வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. அதேபோல், ‘நான் யாராலும் கணிக்க முடியாதவன்’ என்ற வசனத்துடன் முடிகிறது.
பிரம்மாண்டக் காட்சிகள், வண்ண மயமான பாடல்கள், அதிரடிச் சண்டைகள், அரசியல் சமூக கருத்துகள், வசனங்கள் என தனது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் சங்கரின் இந்தப் படைப்பு அமையும் என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.
இப்படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரகனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
இந்நிலையில், தமன் இசையமைத்துள்ள இப்படம், பொங்கல் பண்டிகையையொட்டி, அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதியன்று திரைகாணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.