அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் மேனன், அபிநயா, லட்சுமி பிரியா சந்திரமௌலி நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது.
சென்னையில் நடந்த பட விழாவில் நடிகை அபிநயாவும் கலந்துகொண்டார். அவர் கேட்கும், பேசும் திறன் இல்லாதவர். நிகழ்ச்சியில் சைகை மொழியில் அவர் பேசினார்.
“தளராத முயற்சி முடிவில் வெற்றியைத் தரும் என்று நம்புபவள் நான். அதனால் தான் இந்தப் பயணத்தில் தொடருகிறேன். அந்தவகையில் சினிமாவில் என்னைத் தேர்வு செய்து வாய்ப்பு கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்,” என்றார் அபிநயா.
“சமுத்திரக்கனியுடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் போகப்போக எங்களுடன் நல்ல இணக்கம் ஏற்பட்டது. நான் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க உந்துசக்தியாக இருக்கும் அனைவருக்கும் உண்மையாக இருப்பேன்”, என்றார் அவர்
சமுத்திரக்கனி பேசும்போது, “நல்ல மனிதர்களைப் பார்ப்பது அரிது. எனவே நல்ல படைப்புகளை உருவாக்கும் நல்ல மனிதர்களைப் பத்திரமாகப் பாதுகாப்பது என்பது நமது முக்கிய கடமை”, என்று கூறினார்.
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கார் மேனி செல்வம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சமுத்திரக்கனி- கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முன்னோட்டத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தின் முன்னோட்டத்தில் நடுத்தரக் குடும்பத்தினர் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டங்களைக் காட்டுகிறது. அதேபோல் சாமானியன் ஒருவன் பணக்காரனாக முயற்சி செய்யும் போது ஏற்படும் விளைவுகளையும் படம் காட்சிப்படுத்துகிறது.

