‘சிக்கந்தர்’ இந்திப் படத்தின் தோல்விக்குத் தாம் காரணமல்ல என்று கூறியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
சல்மான் கான் நடிப்பில், பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்த படம் இது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்தார்.
மேலும், காஜல் அகர்வால், சத்யராஜ், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றிருந்தனர். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதையடுத்து, அண்மைய பேட்டியில் தோல்வி குறித்து விளக்கம் அளித்துள்ளார் முருகதாஸ்.
“என் மனத்துக்கு நெருக்கமான கதைகளில் ‘சிக்கந்தர்’ படத்தின் கதையும் ஒன்று. ஆனால், நான் நினைத்த கதையை திரையில் கொண்டுவர முடியவில்லை.
“நான் ஆதிக்கம் செலுத்தும் வகையில் ஒரு குழு அமைந்திருந்தால், நினைத்ததைச் சாதித்திருக்கலாம். அவ்வாறு அமையாததால் தோல்விக்கு நான் மட்டுமே பொறுப்பல்ல,” என்று முருகதாஸ் கூறியுள்ளார்.