தென்னிந்தியத் திரையுலகின் ஜாம்பவானாகத் திகழும் சிரஞ்சீவி, தற்போது தனது 70வது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
இருப்பினும், ஒரு இளையரைப் போன்ற சுறுசுறுப்புடன் திரைத்துறையிலும் பொதுவாழ்விலும் இயங்கி வருகிறார்.
நடிகர் சூர்யாவின் ‘அகரம்’ அறக்கட்டளையால் ஈர்க்கப்பட்ட அவர், பின்தங்கிய மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். ஏற்கெனவே, ரத்த வங்கி, கண் வங்கி மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு உதவி புரிந்துவரும் அவர், தற்போது தெலுங்கு மாநிலங்கள் மட்டுமன்றி தேவைப்படும் இடமெல்லாம் இந்தக் கல்விச் சேவையை விரிவுபடுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது ‘விஸ்வம்பரா’ படத்தை நடித்து முடித்திருக்கும் அவர், அதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில், மார்ச் 19ஆம் தேதி நடைபெற்ற தெலுங்கானா கட்டார் திரைப்பட விருதுகள் 2025 விழாவில், சிரஞ்சீவிக்கு மிகவும் மதிப்புமிக்க ‘என்டிஆர் தேசிய விருது’ வழங்கப்பட்டது. அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் ஆகியோர் இந்த விருதை அவருக்கு வழங்கி சிறப்பித்தனர்.
“பழம்பெரும் நடிகர் என்டிஆர் பெயரில் விருது வாங்குவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை. ராஷ்மிகா உள்ளிட்ட இளைய தலைமுறைக் கலைஞர்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் மிகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

