8 மணி நேர வேலை விவகாரம்: தீபிகாவுக்கு ஆதரவாக ஜோதிகா குரல்

8 மணி நேர வேலை விவகாரம்: தீபிகாவுக்கு ஆதரவாக ஜோதிகா குரல்

2 mins read
05ef6db5-e3ee-492a-b943-05cfd947ee20
சோனாக்சி சின்ஹா, ஜோதிகா (இடப்படம்), தீபிகா படுகோன். - படம்: தினகரன்

இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவின் ‘ஸ்பிரிட்’, ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகியவற்றிலிருந்து தீபிகா படுகோன் விலகியதைத் தொடர்ந்து, திரையுலகில் நடிகர்களுக்கான எட்டு மணி நேர வேலை நேரம் குறித்துப் பரவலான விவாதங்கள் எழுந்தன.

தீபிகா படுகோன் 8 மணி நேர வேலை நேரம் உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்ததாகவும், அது ஏற்கப்படாததால் அந்தப் படங்களிலிருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்துப் பல திரையுலகப் பிரபலங்களும் கருத்துகளைத் தெரிவித்து வரும் வேளையில், நடிகைகள் ஜோதிகாவும் சோனாக்சி சின்ஹாவும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

ஜோதிகா, சோனாக்சி சின்ஹா நடித்திருக்கும் ‘சிஸ்டம்’ இணையத் தொடரின் விளம்பர நிகழ்வின்போது, பாலிவுட், தென்னிந்தியத் திரையுலகிற்கு இடையே இருக்கும் வித்தியாசங்கள் குறித்து ஜோதிகா பேசினார்.

“தென்னிந்தியத் திரையுலகில் வேலை நேரம் மிகவும் சரியாகத் திட்டமிடப்படுகிறது. அங்கு 99 விழுக்காட்டுத் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் மாலை 6 மணிக்கெல்லாம் நிறைவடைந்துவிடும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அல்லது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அங்கு படப்பிடிப்புகள் நடக்கும்” என அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகை சோனாக்சி சின்ஹா, “இங்குப் பல முன்னணி ஆண் நடிகர்கள் 8 மணி நேரத்திற்குமேல் வேலை செய்வதில்லை. அவர்களுடைய படப்பிடிப்பு முடிந்ததோ இல்லையோ, அவர்கள் தங்களின் காரில் ஏறி கிளம்பிவிடுகின்றனர். அவர்களை இங்கு யாரும் கேள்வி கேட்பதில்லை. திரையுலகில் ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டி, இவ்வளவு காலம் உழைத்த ஒரு நபர் 8 மணி நேர வேலை நேரம் கேட்பதில் எந்தத் தவறுமில்லை எனச் சாடியுள்ளார்.

குறிப்பாக ஒரு தாயாக இருக்கும் பெண்களுக்கு இந்த வேலை நேரத் தளர்வு மிகவும் அவசியமானது என்பதை ஜோதிகா வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்