தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மலையாள நடிகர் மோகன்லாலுக்கு, அக்டோபர் 4ஆம் தேதி ‘லால் சலாம்’ எனும் பெயரில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய விளையாட்டரங்கில் நடைபெறும் இவ்விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களுடன் முக்கிய நடிகர்கள், அரசியல் தலைவர்கள், நடிகைகள் ஊர்வசி, ஷோபனா, மஞ்சு வாரியர், பார்வதி, கார்த்திகா, மீனா, நித்யா மேனன், லிஸ்ஸி, பாடகர்கள் சுஜாதா மோகன், சுவேதா மோகன், சித்தாரா கிருஷ்ணகுமார், ஆர்யா தயாள், மஞ்சாரி, ஜோட்ஸ்னா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நடிகர் மோகன்லாலைச் சிறப்பிக்கும் இவ்விழா தொடர்பான அறிவிப்பு செப்டம்பர் 29ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
அதில், 100 ஆண்டுகளைக் கடந்த மலையாள திரையுலகில் நடிகர் மோகன்லால் 50 ஆண்டுகள் சிறப்பாகப் பங்காற்றியுள்ளதாகக் கேரள கலாசார விவகாரத் துறை அமைச்சர் சஜி செரியன் கூறினார்.