அனுஷ்கா ஷெட்டியின் திருமணம் குறித்த வதந்திகள் மீண்டும் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அவர் திருமணம் செய்யப் போகிறார் என்றும் 44 வயதில் அவர் இல்லற வாழ்க்கையில் இணையப் போகிறார் என்றும் செய்திகள் உலா வந்தன.
இந்நிலையில், அனுஷ்கா தரப்பினர் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் காட்டமான விளக்கம் ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
“அனுஷ்காவின் திருமணம் குறித்துத் தொடர்ந்து பகிரப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தினசரி தலைப்புச் செய்திகளாக மாற்றுவது முறையன்று. அதிகாரபூர்வமாக அறிவிக்கும்வரை காத்திருக்கவும்,” எனக் கடுமையாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், “ஏன் ஒவ்வொரு செய்தியிலும் ‘44’ என்ற அவரது வயதிற்கு முக்கியத்துவம் தருகிறீர்கள். இது ஒருவிதமான பகடிவதை. ஆண் நடிகர்களின் வயதைப் பற்றி யாரேனும் பேசுகிறோமா, ஏன் நடிகைகளுக்கு மட்டும் இந்த பாரபட்சம்?,” என அனுஷ்கா தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“தனது தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வைத்திருக்கவே அனுஷ்கா விரும்புகிறார். அந்த முடிவிற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகக் கற்பனைக் கதைகளை உருவாக்க வேண்டாம்,” என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

