தனது தந்தையின் கனவை நனவாக்கும் வகையில், திரைப்பட நாயகனாக வளர்ந்திருப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் குமரன் தெரிவித்துள்ளார்.
இவர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடரில் ‘கதிர்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவரது தந்தை தேனீர்க் கடையில் வேலை பார்த்தவராம். ஆனால், தன் மகன் கதாநாயகன் ஆக வேண்டும் என விரும்பியுள்ளார்.
தன் தந்தையின் கனவை நிறைவேற்ற 17 ஆண்டுகள் பாடுபட்ட குமரன், தற்போது பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குமார சம்பவம்’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
“தொடக்கத்தில் சினிமா துறை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. எங்கெங்கோ வாய்ப்பு கேட்டு அலைந்த பிறகு, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் மூலம் ஓரளவு பிரபலமானேன்.
“இத்தொடரின் படப்பிடிப்புக்காகச் செல்லும் போதெல்லாம் ஒரு நாள் சினிமா படப்பிடிப்புக்காக இப்படிச் செல்ல வேண்டும் என்று மனத்துக்குள் நினைத்துக்கொள்வேன்.
“இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். எந்தக் காட்சியும் முகம் சுளிக்க வைக்காது,” என்கிறார் குமரன்.

