சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பராசக்தி’.
சுதா கொங்கரா இயக்கும் அப்படத்தை ‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். அண்மையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுதா கொங்கராவிடம் ‘பராசக்தி’ படம் குறித்து கேட்கப்பட்டது
அதற்கு,“ அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40 நாட்கள் இருக்கின்றது. சிவகார்த்திகேயனுக்காகக் காத்திருக்கிறோம்,” என அவர் கூறியுள்ளார்.
தற்போது ‘மதராஸி’ படத்தின் படப்பிடிப்பிற்காக சிவா இலங்கை சென்றுள்ளார். அதை முடித்துக்கொண்டு வந்தவுடன் பராசக்தி படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது
மேலும், அப்படம் இந்தித் திணிப்பு பற்றிய படமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
“சமூக ஊடகங்கள் தான் அப்படி சொல்கின்றன. ஆனால் நான் இதுவரை அப்படி சொன்னதே இல்லை. இது சகோதரர்களின் கதை அவ்வளவுதான்,” என்று அவர் பதிலளித்தார்.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் பராசக்தி மோதுகிறதா என்ற கேள்விக்கு, நாங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக அதுகுறித்த அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. வெளியீடு குறித்து நான் முடிவெடுக்க முடியாது. தயாரிப்பாளர் தான் முடிவெடுக்கவேண்டும்” என்றார் சுதா.

