2026 பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தணிக்கைச் சான்றிதழ் சிக்கலில் இருந்த அப்படத்திற்குத் தற்போது, யு/ஏ சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது.
‘பராசக்தி’ படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் சில காட்சிகளை நீக்கும்படி கூறினர். அவற்றை மாற்றும் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டனர்.
அப்பணியை முடித்துத் தணிக்கை வாரியத்திடம் ஒப்படைத்த பின்புதான் அப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே, வெளிநாடுகளில் ‘பராசக்தி’ படத்தை வெளியிடுவதற்கான தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிட்டது. இதனால், சிங்கப்பூரில் அப்பட வெளியீட்டுக்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் வெளியிடவும் தணிக்கை வாரியம் அப்படத்திற்கு அனுமதி அளித்த நிலையில், திட்டமிட்டபடி அப்படம் ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது

