‘நந்தன்’ படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் சசிகுமாரையும் இயக்குநர் இரா. சரவணனையும் அழைத்துப் பாராட்டியுள்ள நடிகர் ரஜினிகாந்த், ‘அழுகையை அடக்க முடியவில்லை’ என ‘அமரன்’ குறித்தும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கியுள்ள படம் ‘நந்தன்’. இப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும், “ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்த யதார்த்த நிலையை நந்தன் துணிச்சலுடன் சுட்டிக் காட்டியிருக்கிறார்,” எனப் பாராட்டினர்.
ரஜினியும் இப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்த்துவிட்டு, நடிகர் சசிகுமார், இயக்குநர் இரா. சரவணன், விநியோகஸ்தர் ட்ரைடன்ட் ரவி ஆகியோரை தொலைபேசி வழி தொடர்புகொண்டு, “நந்தன் மிகத் தரமான, தைரியமான படம்’’ என மனந்திறந்து பாராட்டினார். இதனால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
‘நந்தன்’ படம் டிஜிட்டல் தளத்தில் மில்லியன்கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ‘அமரன்’ படக்குழுவினரையும் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ள ரஜினிகாந்த், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தனது வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார்.
“முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைப் படமாக எடுத்த ராஜ்கமல் நிறுவனத்துக்கு நன்றி. நடிகர் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். இறுதிக் காட்சியில் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படிப்பட்ட படத்தை எடுத்ததற்காகக் கமல்ஹாசனையும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியையும் எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்,” எனத் தெரிவித்துள்ளார்.