தென்னிந்தியச் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருகிறார் ராம் சரண்.
அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் தோல்வியடைந்தது. அந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கினார்.
மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில், இயக்குநர் புச்சி பாபு சனாவுடன் ‘பெத்தி’ படத்தில் ராம் சரண் இணைந்தார்.
அந்தப் படத்தில் கதாநாயகியாகப் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட ‘சூப்பர் ஸ்டார்’ சிவ ராஜ்குமார், திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதிக செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் ராம் சரண் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்குத் திரை நட்சத்திரங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ராம் சரணுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ‘பெத்தி’ படத்தின் சிறப்புக் காணொளியைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்தக் காணொளியில் ராம் சரண் மல்யுத்த வீரராக நடித்திருந்தார்.

