‘பான் இந்தியா’ நடிகையாக திகழும் ராஷ்மிகா மந்தனாவின் கவனம் தற்போது திகில் படங்களின் பக்கம் திரும்பி இருக்கிறது.
ராஷ்மிகா மந்தனா, இந்தித் திரைத்துறையில் திகில், நகைச்சுவை ஆகிய இரண்டையும் கதைக்களமாகக் கொண்டு உருவாகும் ‘வேம்பையர் ஆப் விஜயநகரம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ‘முஞ்யா’ இயக்குனர் ஆதித்யா சர்போத்தர் இயக்கவுள்ளார்.
மிகப்பெரிய பொருட்செலவில் இப்படம் உருவாக உள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
தற்போது ராஷ்மிகா, அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2, விக்கி கவுஷலுடன் சாவா, சல்மான் கானுடன் சிக்கந்தர், தனுஷுடன் குபேரா போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார்.
இந்த ஆண்டு இந்தித் திரையுலகில் வெளியாகும் திகில் படங்கள் அதிக அளவில் வசூல் செய்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘ஷைத்தான்’ படம் வெற்றிபெற்றது. அதனைத்தொடர்ந்து, ஜூன் மாதம் வெளியான ‘முஞ்யா’ படமும் வெற்றிப் படமாக அமைந்தது.
அதேபோல, அண்மையில் வெளியான ஸ்ட்ரீ 2 படமும் ரூ.500 கோடி வசூலை நோக்கி முன்னேறி வருகிறது.