சென்னை: ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவைக் காதலித்து திருமணம் செய்திருந்த தனுஷ் சில காரணங்களால் அவரைப் பிரிந்துவிட்டார். அதன்பிறகு அவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், அவரும் நடிகை மிருணாள் தாக்குரும் உயிருக்கு உயிராய் காதலிக்கிறார்கள் என்றும் விரைவில் அவர்களுக்குத் திருமணம் நடக்கவிருக்கிறது என்றும் தகவல்கள் வலம் வர ஆரம்பித்தன. இதுகுறித்து மிருணாள் முதன்முறையாக மௌனம் கலைத்திருக்கிறார்.
தனுஷும் ஐஸ்வர்யாவும் மணமுறிவு செய்துகொண்ட பிறகும் தங்கள் இரண்டு மகன்களை வளர்க்கும் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யாவைப் பிரிந்த தனுஷுக்கு அவரது தந்தை கஸ்தூரி ராஜா இன்னொரு திருமணம் செய்து வைக்கப்போவதாகவும் அதற்காகத் தங்களது உறவினர் பெண் ஒருவரை பார்த்து வைத்திருப்பதாகவும் பேச்சுகள் கிளம்பின. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது பின்னர் உறுதியானது.
அதேசமயம் நடிகை மிருணாள் தாக்குரும் தனுஷும் ‘டேட்டிங்’ சென்றனர் என்றும் அப்போது ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்டதால் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின.
முக்கியமாக, இன்ஸ்டகிராமில் தனுஷின் சகோதரிகளை மிருணாளும் மிருணாளைத் தனுஷின் சகோதரிகளும் ஒருவரையொருவர் ‘ஃபாலோ’ செய்து வருகின்றனர். அதை வைத்து, மிருணாளுடனான உறவைத் தனுஷ் சொல்லி வீட்டில் சம்மதம் வாங்கிவிட்டதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்றும் வெளிப்படையாகவே பலர் பேசினர். ஆனால், இதுகுறித்து இரண்டு பேருமே எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.
அதுமட்டுமின்றி சில நாள்களுக்கு முன்பு ஒரே அறையில் தனுஷும் மிருணாளும் இருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வந்தது. அதைப் பார்த்த பிறகும் இவர்கள் தொடர்பான காதல் கிசுகிசு மேலும் வலுவடைந்தது. தொடர்ந்து இந்தக் கிசுகிசு பரவிவருவதால் இனிமேலும் விட்டால் சரியாக இருக்காது என மிருணாள் முடிவெடுத்ததாகத் தெரிகிறது. எனவே இதுகுறித்து முதன்முறையாக அவர் பேசியிருக்கிறார்.
“என்னைப் பற்றியும் தனுஷைப் பற்றியும் நீங்கள் கேட்கும் அனைத்துமே பொய். அவை அடிப்படை ஆதாரம் இல்லாதவை. தனுஷ் எனக்கு எப்போதும் ஒரு சகோதரர் மட்டும்தான். எங்களுக்குள் இருப்பது தொழில்ரீதியான உறவு மட்டும்தான்,” என்று மிருணாள் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாறு கூறி இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மிருணாள்.

