தெலுங்கு, கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழிலும் தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் மூலம் இந்தியிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
இதுபோல் பல மொழிப் படங்களிலும் அடுத்தடுத்து பரபரப்பாக நடித்து வந்த இவர், தற்போது புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமாவதைத் திட்டமிட்டுத் தவிர்த்து வருகிறார்.
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிப்பதாக இருந்த நிலையில், கால்ஷீட் வழங்கமுடியாத காரணத்தால் அவருக்குப் பதிலாக கயாடு லோஹர் ஒப்பந்தமானார்.
இதேபோல் அண்மையில் வெளியான ‘லெனின்’ திரைப்படத்திலும் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘கிங்டம்’, தெலுங்கில் உருவாகும் ‘அனகனக ஒக்க ராஜு’ ஆகிய படங்களிலும் கிடைத்த வாய்ப்புகளை இவர் ஏற்க மறுத்து விலகிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் திடீர் விலகலுக்குப் பின்னால் அவரது கல்வி தொடர்பான முக்கியக் காரணம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே ‘எம்பிபிஎஸ்’ மருத்துவப் படிப்பை முடித்துள்ள ஸ்ரீலீலா, தற்போது அதற்கான மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும், உயர்படிப்பான ‘எம்.டி.’ முதுநிலைப் பட்டக்கல்வியில் சேருவதற்காக நீட் தேர்விற்கும் தீவிரமாகத் தயாராகி வருகிறாராம்.
ஸ்ரீலீலாவின் குடும்பத்தினர் அனைவரும் உயர்கல்வி கற்றுச் சிறந்த துறைகளில் பணியாற்றி வருவதால், அவரும் மருத்துவப் படிப்பை முழுமையாக முடித்த பிறகே நடிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்று குடும்பத்தினர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இதன் காரணமாகவே அவர் புதிய படங்களை ஏற்காமல் நடிப்பிலிருந்து தற்காலிகமாக இடைவெளி எடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

