40 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கமலும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக திரைச்செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.
இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ள ரசிகர்கள் “நண்பர்கள் இருவரையும் காலம் ஒன்றிணைத்துள்ளது. இந்த இணைப்பு நிச்சயம் நடந்தே தீரும்,” என்று உறுதிபட கூறுகின்றனர்.
ரஜினி, கமல் சேர்ந்து நடிக்கப் போவது குறித்துதான் கோடம்பாக்கத்தில் பரபரப்பு பேச்சாக இருந்து வருகிறது.
‘நினைத்தாலே இனிக்கும்’, ‘தில்லுமுள்ளு’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘தாயில்லாமல் நானில்லை’, ‘நட்சத்திரம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘16 வயதினிலே’, ‘ஆடு புலி ஆட்டம்’ போன்ற பல படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்தனர்.
ஒரு கட்டத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பதில்லை என்று ரகசிய உடன்படிக்கை செய்து, அதை கடந்த 40 வருடமாக கடைப்பிடித்தும் வருகின்றனர்.
இதற்கிடையே, ஷங்கர் உள்ளிட்ட ஒரு சில இயக்குநர்கள் இருவரையும் இணைத்து படம் இயக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அதற்கு எந்த ஒரு பலனும் கிட்டவில்லை.
நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை எடுத்து அதை விஜய்யின் ‘பிகில்’ படத்தோடு சேர்த்து வெளியீடு செய்து வெற்றி கண்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதனாலேயே அனைவரின் கவனமும் லோகேஷ் பக்கம் திரும்பியுள்ளது.
தற்போது அவர் விஜய்யை வைத்து ‘தளபதி 64’ படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கிடையே லோகேஷ் அண்மையில் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அப்பொழுது லோகேஷை பாராட்டியிருந்த ரஜினி, லோகேஷ் இயக்கத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தாராம்.
‘தளபதி 64’ படத்தை முடித்தபிறகு லோகேஷ் ரஜினிகாந்தை வைத்து தான் படம் எடுக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது. அந்த படத்தில் ரஜினியின் நண்பர் கமல் ஹாசனும் நடிக்கிறாராம்.
ரஜினியும் கமலும் சேர்ந்து அரசியலில் ஈடுபடப்போவதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்கள் படத்தில் இணைந்து நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை கமல் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கப் போகிறாராம்.