லிம் கிம் சான் நினைவு உதவித்தொகை பெற விரும்புவோர் இவ்வாண்டு மார்ச் 3ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
‘எஸ்பிஎச்’ அறக்கட்டளை நிதியாதரவு மூலம் 19வது முறையாக அறிமுகம் காணும் இந்த உதவித்தொகை சிங்கப்பூரின் முதல் தேசிய வளர்ச்சி அமைச்சர் லிம் கிம் சானின் நினைவாக 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
கடந்த 18 ஆண்டுகளில் 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த உதவித்தொகையால் பயனடைந்துள்ளனர். உள்ளூர் பல்கலைக்கழகங்களில் முழுநேர மொழிகள், மொழியியல், மனிதநேயப் பட்டப்படிப்புகள் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
யார் விண்ணப்பிக்கலாம்?
1) மாதாந்தர வீட்டு வருமானம் S$5,000 அல்லது அதற்கும் குறைவாக உள்ள சிங்கப்பூர் குடிமக்கள்
2) உள்ளூர் பல்கலைக்கழக ஆண்டுத் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள்
3) சாதாரண (ஜிசிஇ ‘ஓ’ நிலை) மற்றும் வழக்கநிலைத் (ஜிசிஇ ‘என்’ நிலை) தேர்வுகளில் நல்ல தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள்
4) இணைப்பாட நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக சிறந்த தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள்
5) உதவித்தொகை பெறுபவர்கள் பட்டப் படிப்பின்போதும் அதன்பிறகும் சமூகப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு:
1) தேர்வுக் கட்டணம் உட்பட கல்விக் கட்டணங்கள் முழுமையாக அளிக்கப்படும்.
2) ஆண்டுக்கு S$2,500 வாழ்க்கைச் செலவுத் தொகை அளிக்கப்படும்.
3) ஆண்டுக்கு S$500 புத்தகத்தொகை செலவு அளிக்கப்படும்.
உதவித்தொகை பெறும் மாணவர்கள் முதல் பட்டப்படிப்பு முடிக்க, தேவையான குறைந்தபட்ச காலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படும். பட்டப்படிப்பு அதிகபட்சம் நான்கு ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இது கௌரவப் பட்டம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் பொருந்தும்.
மேலும், ‘எஸ்பிஎச்’ ஊடகத்தில் தொழில் சார்ந்த பயிற்சி வகுப்புகளிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். உதவித்தொகை பெறும் மாணவர்கள், ஊடக வாய்ப்புளைப் பொறுத்து பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த விண்ணப்பங்களுக்கு மட்டுமே உதவித்தொகை கிடைக்கும்.
மேலும் தகவல்கள் மற்றும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க https://www.sphfoundation.org.sg/lks-scholarship-awards/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.