தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சிங்கப்பூரின் பாரம்பரியக் கதைகளுக்கு மின்னிலக்க வடிவத்தில் உயிரூட்டும் ‘ஒன்றாக ஒளிர்வோம் பிராஸ் பாசா.பூகிஸ் 2026’ விளக்குக் கலைக் காட்சி தொடங்கியுள்ளது. மரபுடைமைஎஸ்ஜி ஏற்பாடு செய்த இந்த இரவுநேரக் கலைக் காட்சி, பிராஸ் பாசா, பூகிஸ் வட்டாரத்தைக் கண்கவர் ஒளி வெள்ளத்தில் மிதக்கும் இடமாக மாற்றியமைக்கிறது.
ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சி, சிங்கப்பூரின் புகழ்பெற்ற இரவுத் திருவிழாவுடன் இணைந்து ‘தொன்மங்களும் பழங்கதைகளும்’ என்ற இந்த ஆண்டுக்கான கருப்பொருளின்கீழ் நடத்தப்படுகிறது.
வாட்டர்லூ சென்டரில் உள்ள ஆர்ட்ஸ்பிளேஸ், பிராஸ் பாசா ரயில் நிலையத்தின் ‘ரெஃப்ளெக்ஷன் பூல்’, ஸ்டாம்ஃபர்ட் பிளேஸ், ஸ்டாம்ஃபர்ட் நடைபாதை, சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் ஆகிய ஐந்து முக்கிய இடங்களில் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளைச் சித்திரிக்கும் மின்னிலக்க ஒளிக் கலைக் காட்சி உயிர்பெற்று விளங்கும்.
இந்நிகழ்ச்சி வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 7.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் ஞாயிறு முதல் வியாழக்கிழமை வரை இரவு 7.30 மணி முதல் 11 மணி வரையிலும் பிராஸ் பாசா, பூகிஸ் வட்டாரத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் இதனைக் கண்டுகளிக்கலாம்.
சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில், லைட் டுகெதர் பிராஸ் பாசா.பூகிஸ் 2026ன் ஒரு பகுதியாக, அரும்பொருளகத்தின் அடையாள முகப்பைச் சிறப்பு ஒளிக்காட்சி வரைபடக் கலைப்படைப்பு இம்மாதம் முதல் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை ஒளிரச் செய்யும். பின்னர் இம்மாதம் 21ஆம் தேதியிலிருந்து இந்த முகப்பு புதுப்பிக்கப்பட்டு, இரவுநேரக் கலைக் காட்சி 2026க்கான புதிய ஒளிக்காட்சி வரைபட அனுபவத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கும்.
தற்காலக் கலை வெளிப்பாடுகள், மின்னிலக்க அனுபவங்கள் மூலம் சிங்கப்பூரின் மரபுசார்ந்த அம்சங்களைப் புதிய கோணத்தில் மக்கள் கண்டறியவும் நாட்டின் பிறந்தநாளை எல்லாரும் ஒன்றாகக் கொண்டாடவும் இது சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று நம்பப்படுகிறது.


