மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் எழுத்துத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஆண்டு கட்டுரைப் பயிலரங்கையும் கட்டுரைப் போட்டியையும் நடத்த உள்ளது.
தமிழ் மொழிமீதான ஆர்வத்தையும் ஆழமான கருத்துகளைக் கோவையாக எழுதும் திறனையும் மாணவர்களிடையே வளர்ப்பதே நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
சிங்கப்பூர் உயர்நிலைப் பள்ளிகளில் 27 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட கவிஞரும் எழுத்தாளருமான முனைவர் உஷா சுப்புசாமி, பயிலரங்கை வழிநடத்த உள்ளார்.
முனைவர் உஷா பன்னாட்டுக் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கிய அனுபவம் உள்ளவர்.
சனிக்கிழமை (மே 2) தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் உள்ள ‘பாசிபிலிட்டி’ அறையில் காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நிகழ்வில், உயர்நிலை 1 & 2 மற்றும் உயர்நிலை 3, 4, 5 என இரு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெறும்.
முதல் மூன்று நிலைகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்குத் தலா 100, 75, 50 வெள்ளி மதிப்பிலான பற்றுச்சீட்டுகளும் ஐந்து மாணவர்களுக்கு ஊக்கப்பரிசாக 20 வெள்ளி மதிப்பிலான பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும். மாணவர்கள் பள்ளிச் சீருடையில் வரவேண்டும் என்பது கட்டாயம்.
பயிலரங்கில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வரும் மே 23ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறும் தமிழர் திருநாள் நிகழ்வில் வழங்கப்படும்.

