சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில், சமூகப் பிணைப்பையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதற்கான சிறந்த தளமாக அமைந்தது அண்மையில் நடைபெற்ற குடும்ப நடைப்பயணம்.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நடைபெற்ற இந்த 5 கிலோமீட்டர் நடைப்பயணத்தில் கிட்டத்தட்ட 110 பேர் (40-50 குடும்பங்கள்) உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
புதுக்கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம், பிஎஸ்ஏ கிரசென்ட் மாணவர் சங்கம், வாக் டு மீட் (Walk2Meet) நடைப்பயிற்சிக் குழு ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
காலை 7:30 மணிக்குத் தொடங்கிய நடைப்பயணம், உடற்பயிற்சியின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை அனைத்து வயதினரிடமும் ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்தது.
நிகழ்ச்சியின் நிறைவில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.
அதோடு, சிங்கப்பூரின் 61வது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாட்டு அமைப்புகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பிகளும் பங்கேற்பாளர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டன.
தங்களின் முன்னாள் மாணவர் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய தினத்தைக் கொண்டாடுவதே தங்களுடைய முக்கிய நோக்கம் என்று புதுக்கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் அர்ஷத் அலி பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார்.
“இது குடும்பங்கள், நண்பர்களுடன் இணைந்து ஆரோக்கியமான காலைப் பொழுதை அனுபவிக்க சிறந்த வாய்ப்பாக இருந்தது,” என வாக் டு மீட் நடைப்பயிற்சிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது சாதிக் கூறினார்.
ஆரோக்கியம் பேண முயன்ற அந்தக் காலைப் பொழுது, பங்கேற்ற அனைவரின் மனங்களிலும் நீங்காத நினைவாக நிலைத்திருக்கும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

