இந்தியாவின் பல்வேறு வகை மாம்பழங்களைக் கொண்டாடும் வகையில், மே 1 முதல் 3ஆம் தேதிவரை சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய மாம்பழத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
‘அவர் தெம்பனிஸ் ஹப்’ வளாகத்தில் நடந்த அந்நிகழ்ச்சி கிட்டத்தட்ட 6,000 பேரை ஈர்த்தது. விழாவில் பங்கேற்றோர் 10 வகை இந்திய மாம்பழங்களைச் சுவைத்துப் பார்த்து, தங்களுக்குப் பிடித்தவற்றை வாங்கிக்கொண்டனர்.
மகாராஷ்டிராவிலிருந்து அல்போன்சா, குஜராத்திலிருந்து கேசர், ஆந்திரப் பிரதேசத்திலிருந்து ரசலு போன்றவை இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட மாம்பழ வகைகளில் அடங்கும்.
மாம்பழத் திருவிழா சிங்கப்பூரின் உள்ளூர்ச் சமூகத்தினரிடையே கலாசார இணைப்பை வலுப்படுத்தவும் இந்தியாவின் வேளாண் பாரம்பரியம் பற்றிய புரிதலை மேம்படுத்தவும் உதவியதாகக் கூறப்பட்டது.

