கவிமாலையின் மாதாந்தர ஒன்றுகூடல் ‘திரைப்பாடல்களில் அணிகளும் அழகுணர்வும்’ என்ற தலைப்பில் சனிக்கிழமை (ஜூன் 27) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
தேசிய நூலகக் கட்டடத்தின் 5ஆம் தளத்தில் உள்ள ‘பாசிபிலிட்டி’ அறையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மூத்த கல்வியாளரும் பேச்சாளருமான மன்னை இராஜகோபாலன் சிறப்புரையாற்ற இருக்கிறார்.
கவிஞர் கி. கோவிந்தராசு நிகழ்ச்சியை வழிநடத்த, ‘கவிதையும் காரணமும்’, கவிதை விமர்சனம், கவிதை வாசிப்பு, பரிசளிப்பு உள்ளிட்ட அங்கங்களும் இதில் இடம்பெறும்.
“கவிதை எழுத விருப்பமுள்ளவர்கள், திரைப்படப் பாடல்களின் நயங்களை ரசிக்க விரும்புகிறவர்கள், தமிழார்வலர்கள் ஆகியோரை வரவேற்கிறோம்,” என்று கவிமாலை அமைப்பின் தலைவர் இன்பா தெரிவித்தார்.
சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க தமிழ் மொழி ஆர்வலர் அமைப்பாக உருவெடுத்துள்ள கவிமாலை, தமிழ்மொழி விழாவுக்கு ஆண்டுதோறும் பங்காற்றி வருகிறது.
மாணவர்களுக்கும் தமிழ் ஆர்வமுள்ளோருக்கும் பல பயிலரங்குகளையும் நிகழ்ச்சிகளையும் அது நடத்தி வருகிறது.
பொதுமக்களின் கவித்திறனையும் அமைப்பு மேம்படுத்தியுள்ளது.

