உட்லண்ட்ஸ் குடியிருப்பு வட்டாரத்தில் விசாக தினக் கொண்டாட்டம் களைகட்டியது.
சிங்கப்பூரில் வாழும் பெளத்த சமயத்தவர்கள் பௌத்த ஆலயங்களுக்குச் சென்று திங்கட்கிழமை (மே 12) விசாக தினத்தைக் கொண்டாடினர்.
உட்லண்ட்சில் அமைந்துள்ள BW மோனஸ்ட்டரி பெளத்த ஆலயத்துக்கு காலையிலிருந்தே மக்கள் வழிபாடுகளில் ஈடுபட நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
2018ல் இந்தப் பெளத்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. புதிய ஆலயமாக இருக்க, பக்தர்களின் கூட்ட நெரிசலிலும் அளப்பரிய இறையுணர்வும் விசாக தினத்தன்று தென்பட்டது.
சன்னதி மண்டபத்தில் மூன்று பெரிய புத்தர் சிலைகள் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
ஆலயத்தில் தங்க முலாம் பூசப்பட்ட மற்றொரு புத்தர் சிலையைத் தொட்டு தங்கள் நெற்றிகளில் திலகமிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.
புனிதநீரைப் பெற்று, புத்தர் சிலைக்கு புனித நீர் ஊற்றுவது, விளக்கேற்றுவது போன்ற வழிபாடுகளில் பக்தர்கள் ஈடுபட்டனர்.
சீனர்கள் பலர் ஆலயத்துக்கு வந்திருந்தாலும், இந்தியர்களும் அங்கு வருகைபுரிந்து சடங்குகளில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
வழிபாடு முடிந்த கையோடு ஆலயத்தின் அடித்தளத்தில் தொண்டூழியர்கள் உடனுக்குடன் அன்னதானம் வழங்கினர்.
தாமரைப்பூ வடிவங்களில் விளக்குகள், புத்தர் சிலைகளுக்குமுன் மண்டியிட்டு வழிபாடுகளில் ஈடுபடுவது என சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத்தைப் பறைசாற்றும் வண்ணம் குடியிருப்பு வட்டாரத்தில் விசாக தின நிகழ்வு அமைந்தது.
சென்ற ஆண்டு விசாக தினத்தன்று இந்த ஆலயத்துக்கு வந்திருந்த சின்மயா வளலன், இம்முறை ஆலயத்தில் தொண்டூழியராகச் சேவையாற்றினார். ஆலயத்திற்குமுன் இருக்கும் புத்தர் சிலைக்கு புனித நீர் ஊற்ற பக்தர்களுக்கு அவர் உதவினார்.
“நான் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்வேன். இளம் வயதிலிருந்து தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் என அனைத்துக்கும் சென்றுள்ளேன். பிறருக்கு நல்லதைச் செய்ய வேண்டும் என்பதையே அனைத்துச் சமயங்களும் நமக்குக் கற்றுத் தருகின்றன,” என்றார் ஆசிரியரான சின்மயா.
தம் குடும்பத்துடன் ஒவ்வோர் ஆண்டும் மறவாமல் இந்தப் பெளத்த ஆலயத்துக்கு வந்துவிடுவார் துணைப்பாட ஆசிரியர் யசோதா ரகுநாதன், 46.
“முன்பு நாங்கள் லிட்டில் இந்தியாவில் இருக்கும் பெளத்த ஆலயத்துக்குச் செல்வோம். ஆனால், இந்த ஆலயம் என் வீட்டுக்கு அருகில் இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக இங்கு வருகிறோம். புத்தருக்கு மரியாதை செலுத்த நான் விசாக தினத்தன்று இங்கு வருகிறேன். சிங்கப்பூரின் பன்முக கலாசாரம் இதில் நன்கு தெரிகிறது. அனைத்து இனத்தவர்களும் ஒன்றுகூடும் இடமாக இந்த ஆலயம் உள்ளது,” என்றார் யசோதா.