சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், கரையோரப் பூந்தோட்டங்களுடன் இணைந்து நடத்திய 12வது அனைத்துலக யோகா தினக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெற்றது.
கலாசார, சமூக, இளையர்துறை; போக்குவரத்துத் துணை அமைச்சர் பே யாம் கெங் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஷில்பக் அம்புலேவின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது அவர், யோகாவின் காலத்தைக் கடந்த மதிப்பும் அதன் உலகளாவிய ஈர்ப்பும் குறித்து தமது உரையில் வலியுறுத்தினார்.
“ஆரோக்கியமான மூப்படைதலுக்கு யோகா என்பதே இவ்வாண்டின் உலகளாவிய கருப்பொருள். உண்மையான நல்வாழ்வு என்பது உடல், மனம், சமுதாயத்திற்கு இடையே ஒரு சுமுகமான சமநிலையைப் பேணுவதன் மூலமே சாத்தியமாகிறது என்ற காலத்தைக் கடந்த ஞானத்தை இது நமக்கு உணர்த்துகிறது,” என்றார் டாக்டர் ஷில்பக் அம்புலே.
அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய திரு பே, ஆரோக்கியமான, சமநிலையான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வதில் யோகா முக்கியப் பங்கு வகிப்பதைச் சுட்டினார்.
கரையோரப் பூந்தோட்டங்களில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில் 350க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் கலந்துகொண்டு பலவகையான யோகாசனங்களைச் செய்தனர்.

