‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பு வரும் சனிக்கிழமை (மே 9) இலக்கியக் கலந்துரையாடலை நடத்துகிறது.
பொங்கோல் சமூக மன்றத்தில் அமைப்பின் 103வது மாதாந்தரச் சந்திப்பாக நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இலக்கியச் செறிவையும் கலைநயத்தையும் எதிர்பார்க்கலாம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
மாலை 5 மணிக்குத் தொடங்கவுள்ள நிகழ்ச்சி உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் இணைய வழியிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
புதுச்சேரி தாகூர் அரசுக் கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் க. ரேவதி, ‘குறிஞ்சிப் பாட்டும் அறத்தொடு நிற்றலும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.
வாழ்வியல் இலக்கியப் பொழிலின் தலைவர் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி, ‘அறப்போர் மறப்போர்’ என்ற தலைப்பில் அறிமுகவுரையை வழங்கவுள்ளார்.
இவர்களுடன், தாதியராகப் பணியாற்றும் திருமதி ஹேமா பிரபாகரன், திருமதி கற்பகலட்சுமி ஆகியோர் ‘செவிலியர்’ என்ற தலைப்பில் தங்களின் வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் சிற்றுரைகளை வழங்க உள்ளனர்.
பெற்றோரும் பிள்ளைகளும் ஈடுபடும் ‘வேரும் விழுதும்’, சிறாரின் பல்சுவை அங்கங்கள், இலக்கிய, இலக்கணப் புதிர்கள், சங்க இலக்கியப் பாடல் விளக்கங்கள், பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் ஆகியவை இடம்பெறவிருக்கின்றன.
மேல்விவரங்களுக்கு எல்ல. கிருஷ்ணமூர்த்தியை 9228 8544 என்ற கைப்பேசி எண்ணிலோ admin@ilakkiyapozhil.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம்.

