எழுதுவதிலும் தோட்டக்கலையிலும் உள்ள ஆர்வத்தை ‘ராமுவின் அழகிய தோட்டம்’ என்ற சிறுவர் நூல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் 72 வயது திரு காஜார் முகமது இக்பால்.
மூன்று பாகங்களைக் கொண்ட அந்த நூல் 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் ரசிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
“சிறு பிள்ளைகள் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். அதன் வழியாக எளிதில் செய்யலாம்,” என்ற திரு காஜா, உள்ளூர் சூழலுக்கு ஏற்ப ‘ராமுவின் அழகிய தோட்டம்’ நூலை எழுதினார்.
“லிட்டில் இந்தியா போன்ற பழக்கப்பட்ட இடங்களைப் கதையில் பார்க்கும்போது சிறுவர்கள் எளிதில் கதையையும் மொழியையும் புரிந்துகொள்வார்கள்,” என்றார் நூல் அறிமுக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருமதி சரோஜினி பத்மநாதன்.
நூலின் இறுதியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பிள்ளைகளுக்கான கேள்விகள் இடம்பெறுகின்றன. அது பெற்றோரும் பிள்ளைகளையும் தமிழில் பேசவைக்க ஊக்குவிக்கிறது என்றார் நூல் வாசிப்பு அங்கத்தை நடத்திய ஆசிரியர் கனகேஸ்வரி முத்துக்குமரன், 33.
நூல் அறிமுக நிகழ்ச்சிக்கு சுமார் 50 பெற்றோர், சிறுவர்கள் வந்திருந்தனர்.
இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதியின் ஆதரவுடன் ‘ராமுவின் அழகிய தோட்டம்’ நூல் எழுதப்பட்டது.
மேல் விவரங்களுக்கு https://www.abcsoftamil.com/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

