வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்ய ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) பொத்தோங் பாசிர் சமூக மன்றத்திற்குச் சென்றனர்.
மலேசியாவைச் சேர்ந்த ‘புளூ பிரதர்ஸ்’ அறநிறுவனம், ரத்த தான இயக்கத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
ரத்தத்துக்கான தேவை அதிகரித்துவரும் சூழலில், சிங்கப்பூரில் 2 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே ரத்த தானம் செய்வதை அறநிறுவனத்தின் தொண்டூழியர் தனபாலன் மூர்த்தி சுட்டினார்.
“இதற்கான தேவையை அறிந்து எங்களால் முடிந்த அளவு பங்காற்றலாம் என்று முடிவு செய்தோம்,” என்றார் அவர்.
1980களில் ஒன்றிணைந்து காற்பந்து விளையாடிய நண்பர்கள், நாளடைவில் சமூகச் சேவைமீது கவனம் செலுத்த ‘புளூ பிரதர்ஸ்’ அறநிறுவனம் வழிவகுத்தது.
சிங்கப்பூரில் முதல் முறையாக ரத்த தான இயக்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது இந்த அறநிறுவனம். சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் பொத்தோங் பாசிர் சமூக மன்றமும் இணைந்து இந்த நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ளன.
இந்நிலையில், ரத்த தானம் போன்ற மேலும் சில நடவடிக்கைகளுக்கு நலத்திட்டங்கள் உள்ளதாக திரு தனபாலன் கூறினார்.
“ரத்த தானம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை பொதுவாக மிகக் குறைவு. பெண்களிடையே எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது குறித்த கூடுதல் தகவல்களை நாங்கள் சேகரித்து வருகிறோம்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
அதுமட்டுமின்றி, இன்னும் பல இளையர்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
“ரத்த தானம் செய்வது எளிமையான செயல். ஒவ்வொரு தனி மனிதனின் முயற்சியால் பல உயிர்களைக் காப்பாற்றலாம்,” என்று அவர் கூறினார்.

