கடந்த சில மாதங்களாக உலகளவில் மாபெரும் இலக்கியப் போட்டிகளோடு தொடங்கிய பொழில் சதைய விழா, சனிக்கிழமை (பிப்ரவரி 14) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இவ்விழாவில் ‘பொழில் பண்பலை’ செயலி வெளியீடு காணவுள்ளது.
மேலும், புறநானூற்றுப் பாடலுக்கு இலக்கிய நாடகம், போட்டியில் முதல் பரிசுபெற்ற பாடல் வெளியீடு, கவிதைத் தொகுப்பு வெளியீடு ஆகியவையும் இடம்பெறுகின்றன.
தமிழறிஞர் பேராசிரியர் முனைவர் சுப. திண்ணப்பன், முனைவர் மணிவண்ணன் முருகேசன், திரு நசீர் கனி ஆகியோரின் வாழ்த்துரையும் இடம்பெறவுள்ளன. இதில், செம்பவாங் குழுத்திகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கேப்ரியல் லாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுவார். அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தியின் தலைமையுரை இடம்பெறும்.
சிங்கப்பூர்வாழ் தமிழர்களுக்கு நடத்தப்பட்ட ‘தனித்தமிழ்ப் போட்டி’, உலகளவில் கவிதைப் போட்டி, பாடல் எழுதும் போட்டி, கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அரங்கில் நேரடிப் புதிர் போட்டிகளும் உண்டு.
மலேசியாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் போட்டியில் பங்குபெற்றவர்கள் ‘பொழில் 100’ விழாவில் கலந்துகொள்ள வருகை தரவுள்ளனர். மேல்விவரங்களுக்கு பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தியை அணுகலாம். தொடர்பு எண்: 9228 8544.

