சீலாட் ரோடு சீக்கியக் கோவிலின் நூற்றாண்டு விழா கொண்டாட்ட ஒளியூட்டு ஜூன் 15ஆம் தேதி மாலை நடைபெற்றது.
பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சீக்கியக் கோவிலின் நூற்றாண்டு விழா ஒளியூட்டை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
நிகழ்வில் பேசிய அமைச்சர், “நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது என்றால், நீங்கள் சரியானதைச் செய்து வருகிறீர்கள் என்பதையும் உங்கள் சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்துள்ளீர்கள் என்பதையும் அது குறிக்கிறது,” என்றார்.
சிங்கப்பூர் சமூகத்தின் பரந்த பல்லினமிக்க சமூகக் கட்டமைப்பிற்கு சீக்கிய சமூகம் முக்கியப் பங்காற்றியுள்ளதாகச் கூறிய அமைச்சர், சமூகத்தின் மற்ற அங்கத்தினருடனான உரையாடல்களிலும் சீக்கிய சமூகம் முன்மாதிரியான அணுகுமுறையைக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
எளியோர் வறியோருக்குத் தொண்டு செய்வதில் புகழ் பெற்று விளங்கும் சீக்கிய சமூக சமையலைறையின் சேவைகளைப் பாராட்டிய அமைச்சர், இக்கோவிலில் தயார் செய்யப்படும் உணவுவகைகள் வெறும் வயிற்றுக்கானவை அன்று, அவை அவர்கள் மனத்திற்குமானவை,” என்றார்.
சீக்கிய சமூகம் மற்றும் அதன் பாரம்பரியங்கள் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதிலும், பரந்த சிங்கப்பூர் சமூகத்தினரிடையே சீரான வழித்தடமாகச் செயல்படுவதிலும் குறிப்பிடத்தகுந்த கருவியாகச் செயலாற்றி வருவதாகக் கூறினார், விழாவில் வரவேற்புரை ஆற்றிய மத்திய சீக்கியக் கோவில் வாரியத் தலைவர் குர்தீப் சிங் உஸ்மா.
சீக்கியக் கோவிலின் நூற்றாண்டு விழா ஒளியூட்டு நிகழ்வில் இதர சமயங்களைச் சேர்ந்த மக்களும் சமூகத் தலைவர்களும் பங்கேற்றனர்.