இவ்வாண்டு 75வது ஆண்டு நிறைவு எனும் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ள சிங்கப்பூர் தமிழர் சங்கம், அதற்கான கொண்டாட்டத்தில் அடுத்த தலைமுறையையும் மனதில் கொண்டது.
டிசம்பர் 6ஆம் தேதி இளையருக்காக அது நடத்திய முதல் காற்பந்துப் போட்டி, சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் நடந்தேறியது.
12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டோர் இருக்கும் மொத்தம் 16 அணிகள் போட்டியிட்டன.
கடும் போட்டிக்குப் பின் முதல் நிலையை ‘எம்எஃப்சி’ கைப்பற்றியது. இரண்டாம் நிலையில் ‘ஜிலேபிபாய்ஸ்’, மூன்றாம் நிலையில் ‘கூன் ஸ்குவாட் எஃப்சி’, நான்காம் நிலையில் ‘வெஸ்ட்சைடர்ஸ் யூத்’ ஆகிய அணிகள் வந்தன.
பல இனத்தவரும் ஒன்றாக இணைந்து விளையாடியதைப் பாராட்டினார் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வருகையளித்த என்டியுசி தலைவர் கே தனலெட்சுமி.
“அவர்கள் பிற இனத்தவரின் பண்பாட்டைப் புரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. சிங்கப்பூர் தமிழர் சங்கம் இப்போட்டியை ஏற்பாடு செய்வது, இன நல்லிணக்கமிகுந்த சமூகத்தை உருவாக்குவதில் அவர்கள் காட்டும் அக்கறையைப் பறைசாற்றுகிறது,” என்றார் அவர்.
“இப்போட்டிகள் இளையர்களிடத்தில் ஆரோக்கிய வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கின்றன. இளம்வயதிலிருந்தே விளையாட்டில் ஈடுபட்டால், வருங்காலத்தில் ஒட்டுமொத்த நாடே ஆரோக்கியமாகத் திகழும்,” என்றார் அவர்.
அவரும் சிங்கப்பூர் தமிழர் சங்கத் தலைவர் ஜான் ராகவனும் இணைந்து பரிசுகளை வழங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
நான்காம் நிலைக்கு $250 பற்றுச்சீட்டுகள், மூன்றாம் நிலைக்கு $500 ரொக்கம், இரண்டாம் நிலைக்கு $750 ரொக்கம், முதல் நிலைக்கு $1,000 ரொக்கம் வெற்றிக் கிண்ணங்களுடன் பரிசாக வழங்கப்பட்டன. முதல் மூன்று நிலையில் வந்த அணிகளின் விளையாட்டாளர்களுக்குப் பதக்கங்களும் கிடைத்தன.
முதல் நிலையைப் பிடித்த ‘எம்எஃப்சி’க்கு சவால் கிண்ணமும் கிடைத்தது. இனி ஆண்டுதோறும் நடைபெறவுள்ள இப்போட்டியில் வெற்றிபெறும் அணிகளின் பெயர் அதில் பொறிக்கப்படும்.
ஆக அதிகமான கோல்கள் போட்டு ‘கோல்டன் பூட்’ விருதை வென்றனர் ‘ஜிலேபிபாய்ஸ்’ அணியின் அஜே, ‘லா பிலாட்டா ஜூனியர்’ அணியின் சரணேஷ். சிறந்த கோல்காப்பாளருக்கான ‘கோல்டன் கிளோவ்’ விருதை வென்றார் ‘ஜிலேபிபாய்ஸ்’ அணியின் ஜெர்வின். ‘ஆக சிறந்த விளையாட்டாளர்’ விருதை வென்றார் ‘எம்எஃப்சி’யின் அகில்.
“நாங்கள் எல்லோரும் ஒரே பள்ளியிலிருந்து வந்தவர்கள். புளோக்கிற்கு கீழேயும் விளையாடினோம். இப்போது போட்டிகளில் பங்கேற்கும் நிலைக்கு முன்னேறியுள்ளோம்,” என்றார் அஜே.
சிங்கப்பூர் தமிழர் சங்கத்தின் துணைப் பொருளாளரும் போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான விஜயன், “தமிழர் மட்டுமன்றி அனைத்து இளையர்களிடையேயும் விளையாட்டுமூலம் ஓர் ஒற்றுமை இருக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.
சென்ற ஆண்டும் சிங்கப்பூர் தமிழர் சங்கம் நடத்திய 74வது பொங்கல் விழாவில், பள்ளியில் சிறந்து விளங்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கான புதிய கல்வி உதவித்தொகையை சங்கம் தொடங்கியது.

