கவிமாலை ஆண்டுதோறும் வழங்கும் கணையாழி விருது இவ்வாண்டு சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சி. சாமிக்கண்ணுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தமிழ்மொழி சிறந்திருக்க அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இம்மாதம் 1ஆம் தேதி 'சிவில் சர்விஸ் கிளப்' அரங்கில் நடைபெற்ற தமிழ்மொழி விழாவின் நிறைவு நிகழ்ச்சியான கவிமாலை நிகழ்ச்சியில் அவருக்கு கணையாழி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
திரு சாமிக்கண்ணு தமிழாசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது தமிழ்ச் சமூகத்துக்குப் பல்வேறு வகையில் பங்களித்து உள்ளார்.
தமிழ் மொழி வாரம் தொடங்கப்படுவதற்கும் சிங்கப்பூரில் தமிழில் பட்டக்கல்வி சாத்தியமாவதற்கும் உந்துசக்தியாக விளங்கியவர்களில் திரு சாமிக்கண்ணுவும் ஒருவர். வளர்தமிழ் இயக்கத்தின் தொடக்க கால உறுப் பினர்களிலும் ஒருவராக இவர் இருந்தார். "மாறிவரும் மொழிச்சூழலுக்கு ஏற்ப நாம் இளைய தலைமுறையினருக்கான நவீனமயமான முயற்சிகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.
"தமிழில் சிறந்து செயல்படும் மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்துத் தமிழ் மாணவர்களுக்குமான நிகழ்ச்சிகளைப் படைக்க முயற்சி செய்யவேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.