ஜூலை 30ஆம் தேதி அன்று ஐந்தாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது பிஸ்மி வானொலி.
தமிழ் இஸ்லாமிய பயான்கள், சிறப்புரைகள், வாழ்க்கைப் பாடங்கள், குர்ஆன் வாசிப்பு, குர்ஆன் விளக்கங்கள் போன்ற பல அங்கங்களை பிஸ்மி வானொலி ஒலிபரப்பி வருகிறது. இஸ்லாமிய சமயத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை உடைத்தெறிந்து, சமயத்தில் உள்ள நல்லனவற்றை மற்றவர்களுக்கு எடுத்துக்கூறும் நோக்கில் இவ்வானொலியைத் தொடங்கியதாகக் கூறினார் அதன் நிறுவனர் திரு சீனி ஜாஃபர் கனி.
பொருளாதார நிபுணராக இருக்கும் திரு ஜாஃபர், முன்னதாக உள்ளூர் வானொலிகளில் பொருளாதார நிகழ்ச்சிகள் படைத்தவர். அச்சமயத்தில், உள்ளூர்த் தமிழ் வானொலிகளில் ஒலிபரப்பான சமயம் சார்ந்த நிகழ்ச்சிகள் குறைந்து வந்தன.
அதனால், இஸ்லாமிய நிகழ்ச்சிகளைத் திரும்பவும் கொண்டுவர வேண்டும் என்று பலர் அவரை அணுகியதாக கூறினார். தேவை அதிகம் இருப்பதாக உணர்ந்த அவர், 2015ல் அதற்கான முயற்சியைத் தொடங்கி, தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக 2017ல் வானொலியை ஒரு செயலி மூலம் தொடங்கினார்.
முதல் நாள் பத்து பேர் மட்டுமே கேட்டு ரசித்த வானொலி, இன்று தினம் 200,000க்கும் அதிகமானோரால் நாடப்படுகிறது என்றார் திரு ஜாஃபர். ரமலான் மாதத்தில் தினம் 500,000க்கும் மேற்பட்டோர் தம் வானொலியைக் கேட்பார்கள் என்றார் அவர்.
சிங்கப்பூர், மலேசியா, இந்தியா நாடுகளைச் சேர்ந்தோர் அதிகம் கேட்கும் இவ்வானொலி, மொத்தம் 93 நாடுகளைச் சென்றடைந்துள்ளது.
ஜாமியா சிங்கப்பூர், சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், பள்ளிவாசல்கள் எனப் பல நிறுவனங்களோடு ஒன்றிணைந்து பல்வேறு சமூக சேவைகளையும் பிஸ்மி வானொலி வழங்கி வருகிறது.
ஐந்தாண்டு நிறைவு விழாவில் உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
விழாவில் சிறப்பம்சமாக பிஸ்மி வானொலி, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகம், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்பு, ஜாமியா சிங்கப்பூர், முஸ்லிம் சிறுநீரகச் செயல்பாட்டு அமைப்பு, இந்திய முஸ்லிம் பேரவை என ஏழு அமைப்புகள் சேர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
உதவி நாடுவோருக்கு நேரடித் தொடர்பு எண் ஒன்றும் வெளியிடப்பட்டது. நிதி, நீதி, கல்வி, மருத்துவம், மணவாழ்வு, சமூகம் என ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆறு வகைப்படுத்தி, அவற்றின் அடிப்படையில் உதவி வழங்கக்கூடிய சரியான நிறுவனத்துடன் இணைக்கப்படுவார். இந்நேரடித் தொடர்பு எண் மூலம் உதவி நாடுவதை சுலபமாக்க முயற்சித்து வருகின்றனர்.
பொழுதுபோக்குக்காக மட்டும் மக்கள் வானொலி கேட்பதுடன் நின்றுவிடாமல் சமூக நலனுக்காகவும் பங்காற்ற வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார் திரு ஜாஃபர்.