சிங்கப்பூரில் நவீன இலக்கியம் சார்ந்த பேச்சுகளும் எழுத்துகளும் அதிகரித்திருப்பது மகிழ்வைத் தருகிறதெனச் சொல்கிறார் நவீன இலக்கிய உலகின் பல்வேறு விருதுகளை வென்ற முன்னணித் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன்.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2023 நிகழ்வுகளுக்காக வந்துள்ள திரு பெருமாள் முருகன், இங்குள்ள நிலப்பரப்பு, மக்கள், படைப்புகள் என அனைத்தையும் ரசிப்பதாகச் சொன்னார்.
சிங்கப்பூர்த் தமிழ்ப் பாடத்திட்ட ஆலோசகராகவும் பணியாற்றும் இவர், பள்ளிக் குழந்தைகளிடமும் தமிழ் மொழியைக் கொண்டுசேர்க்க பல முன்னெடுப்புகள் நடப்பதைப் பார்க்க முடிகிறது என்று குறிப்பிட்டார்.
“தமிழ் இலக்கியங்களை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசேர்ப்பதற்கு முதற்படி தமிழ் மொழியாகக் கொண்டுசேர்ப்பது. தமிழ் பிள்ளைகள் வீட்டில் தமிழைச் சரளமாகப் பேசவும், பாடநூல் தாண்டிய புத்தகங்களையும் படிக்க ஊக்குவிப்பதும் பயிற்சியளிப்பதும் நம் கடமை,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூரில் தமிழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கை கூடி வருவதைப் பெருமையாகக் குறிப்பிட்ட அவர், “இங்குள்ள தமிழ் எழுத்தாளர்கள் தமிழகத்தைப் பற்றியும், தமிழர் நாகரிகம், நினைவுகள் பற்றியும் எழுதுவதைவிட, சிங்கப்பூர் குறித்தும், இங்குள்ள தமிழ் மக்களின் வாழ்வியல், வரலாறு, அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்தும் எழுத வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூர் தமிழரின் மனம் எவ்வாறு செயல்படுகிறது, இங்குள்ள நவீன வாழ்க்கை முறையின் சாதக பாதகங்கள் என சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட நவீன இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும் என்றார்.
கடந்த 1980களுக்குப் பின்பு புலம்பெயர்த் தமிழர் இலக்கியங்கள் வாசகர்களிடம் கவனத்தைப் பெற்றபோது, இலங்கைத் தமிழ் இலக்கியங்கள் உரிய அங்கீகாரம் பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், சிங்கப்பூரை நுட்பமாகக் கவனித்து, சுவைபடச் சித்திரிக்கும் படைப்புகள் அதிகரித்தால், ‘சிங்கப்பூர் புலம்பெயர்த் தமிழர் இலக்கியம்’ என ஒரு தனி வகைமையை உருவாக்கி, உலகளாவிய அங்கீகாரம் பெறச் செய்யலாம் என்றும் கூறினார்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் பன்னிரண்டு புதினங்கள் (நாவல்), ஆறு சிறுகதைத் தொகுப்புகள், ஆறு கவிதைத் தொகுப்புகள், பல கட்டுரை நூல்கள் என பலவற்றைப் படைத்துள்ளார்.
பெருவாசகப் பரப்பைக் கொண்டுள்ள இவரது நூல்கள், அமெரிக்காவின் மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கான தேசிய விருதுப் பட்டியலிலும், அனைத்துலக புக்கர் பரிசு நெடும்பட்டியலிலும் இடம்பெற்றன.
இவரது ‘ஆளண்டாப் பட்சி’ நூலுக்கும் அதன் மொழிப்பெயர்ப்புக்கும் இவ்வாண்டிற்கான ஜேசிபி இலக்கிய விருதும் கிடைத்துள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.