சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில், கழகத்தின் பொருளாளர் மணிமாலா மதியழகன், செயலவை உறுப்பினர் ஹேமா ஆகியோரின் மூன்று நூல்களின் வெளியீடு மார்ச் 3ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தேசிய நூலகத்தின் 5ஆவது தளத்திலுள்ள இமேஜினேஷன் அறையில் நடைபெறவுள்ளது.
கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன் தலைமையில் ஹேமாவின் ‘ஆதிநிலத்து மனிதர்கள்’ கட்டுரை நூலை முனைவர் ந.செல்லக்கிருஷ்ணன், ‘முகம் தொலைத்தவனின் அகக்குறிப்புகள்’ சிறுகதைத் தொகுப்பு நூலை கவிஞர் கங்கா பாஸ்கரன்; எழுத்தாளர் மணிமாலா மதியழகனின் ‘ஆழிப்பெருக்கு’ சிறுகதைத் தொகுப்பு நூலை எழுத்தாளர் திரு. இராம வயிரவனும் அறிமுகம் செய்யவுள்ளனர்.
எழுத்தாளர் கழகச் செயலாளர் பிரேமா மகாலிங்கத்தின் வரவேற்புரையுடன் தொடங்கி நூலாசிரியர்கள் ஹேமா மற்றும் மணிமாலா மதியழகன் ஆகிய இருவருடைய ஏற்புரை மற்றும் நன்றியுரையுடன் விழா நிறைவடையும்.
கழகத்தின் உதவிப் பொருளாளர் பிரதீபா வீரபாண்டியன் நிகழ்ச்சியை நெறிப்படுத்துவார். அனுமதி இலவசம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.