ஸ்ரீ நாராயண மிஷன் மார்ச் 16ஆம் தேதி நோன்பு துறக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் 70க்கும் மேற்பட்ட வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்த சமூகத் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிகழ்ச்சியில் உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் இணைப் பேராசிரியர் டாக்டர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீ நாராயண மிஷன் இரண்டாம் முறையாக ஏற்பாடு செய்திருக்கும் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி இது.
ஸ்ரீ நாராயண மிஷனின் தலைவரான திரு அனில் சரசிஜாக்ஷன், சமய நல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக வாழ்வது எவ்வளவு முக்கியம் என்று சுட்டிக்காட்டி, அன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
கலாசாரப் பன்முகத்தன்மைக்கு இடையிலும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் இத்தகைய சமூக ஒன்றுகூடலால் சிங்கப்பூர் மிளிர்வதாக டாக்டர் ஃபைஷல் கூறினார்.
வெளிநாடுகளிலிருந்து குடிபெயர்ந்தவர்களுக்காக சமூக ஆலோசனை, மனநலம் பாதுகாத்தல் போன்ற சேவைகளை அளிக்கும் 24ஆசியா என்ற தொண்டுநிறுவனம் இந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்திருந்தது.
மன நிறைவாக நோன்பு துறந்த பின், வருகையளித்திருந்த முஸ்லிம் மக்கள் தங்களது தொழுகையை மேற்கொண்டு மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்து அந்நாளைச் சேர்ந்து கொண்டாடினார்கள்.