பறந்த தமது போர்ச் சிறகுகள் ஒய்ந்த பின்பும் தொடர்ந்து வரும் தலைமுறைகளைச் சேர்ந்த போர் வீரர்களை ஊக்குவிக்கும் ஒருவர்தான் கர்னல் குஹராஜசிங்கம் கரலசிங்கம், 72.
இவரது அலுவலகம் 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே 36,000 அடி உயரத்தில்தான். மேகங்களின் அழகில் பல காலம் மெய் மறந்திருந்த இந்தப் போர் விமானி முதலில் ஓர் ஆசிரியராகப் பணிபுரிய ஆசைப்பட்டார்.
“1968ஆம் ஆண்டில் சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப் படை விமானிகள் வேண்டும் எனப் பல விளம்பரங்களை வெளியிட்டது. நான் ஓர் ஆசிரியர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த போதிலும், இதற்கு முயற்சி செய்து பார்ப்போம் என்ற முடிவுடன் ஆகாயப் படையில் சேர விண்ணப்பித்தேன்,” என்றார் இவர்.
சிறிய விமானப்படைப் பிரிவில் சேர்ந்த திரு சிங்கம், படிப்படியாகத் தமது தேசத்தின் வான் எல்லைகளைப் பாதுகாக்க அறிந்துகொண்டார்; அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டார்.
1973ஆம் ஆண்டில் 21 வீரர்கள் கொண்ட ஒரு சிறிய விமானப்படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. சதுரங்க ஆட்டத்தில் தடைகளைத் துல்லியமாகக் கடந்து செல்லும் ‘நைட்’ காயைப் போலவே ஆகாயப் படையின் அதிகாரபூர்வமான போர் விமான சாகசப் படையானது ‘பிளாக் நைட்ஸ்’ என்றழைக்கப்படத் தொடங்கியது.
காலஞ்சென்ற சிங்கப்பூரின் இரண்டாவது துணைப் பிரதமரான கோ கெங் சுவீ வைத்த துடிப்பான பெயர் இந்த ‘பிளாக் நைட்ஸ்’. இன்றுவரை அதன் பெருமை மாறாது விளங்குகிறது.
அன்பாக ‘கர்னல் பிராங்க் சிங்கம்’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட திரு சிங்கம், “நமது சிங்கப்பூர் ஆகாயப் படை சிறிதாக இருந்தாலும், உலகளவில் பரவலாகிய பாதுகாப்புப் படைகளில் ஒன்று. அதற்கு ‘பிளாக் நைட்ஸ்’ போர் வீரர்களாகிய நாங்கள், முக்கியப் பங்காற்றியுள்ளோம் என்று எண்ணி நான் பெருமையடைகிறேன்,” என்றார்.
“போர் விமானிகளாகிய நாம் என்றும் தயார்நிலையில் இருப்பது அவசியம். அடுத்த நொடி நமக்கு நிச்சயமற்ற ஒன்று. செல்லும் பாதையின் மீதான எதிர்பார்ப்புகள் ஒரு போர் விமானிக்குச் சற்று வேறுபட்டிருக்கும்,” என்றார் திரு சிங்கம்.
1979ஆம் ஆண்டில் மேகம் மூடிய மலையின்மீது ஆர்எஸ்ஏஎஃப் விமானம் மோதியதில், படைப்பிரிவைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். இதுபோன்ற அனுபவங்கள் விரைவில் வாழ்க்கையின் மீதான ஆழ்ந்த புரிந்துணர்வை ஏற்படுத்துகின்றன என்று நினைவுகூர்ந்தார் இவர்.
சிங்கப்பூர் ஆகாயப் படையிலிருந்து ஒரு கர்னலாக 2001ஆம் ஆண்டு விடைபெற்ற இவர், “பறப்பது மட்டுமல்லாது, விமானப்படையில் இருப்பதும் வாழ்க்கையைப் பற்றி எனக்குப் பலவற்றைக் கற்றுக் கொடுத்தது,” என்று புன்னகைத்தவாறே கூறினார்.
“அன்று நான் சந்தித்த சவால்கள், இன்றைய சவால்களிலிருந்து சற்று மாறுபட்டவை. சிங்கப்பூரின் பாதுகாப்பைச் சாதாரணமாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அது நமக்கு முக்கியமானதோர் ஆயுதம்,” என்கிறார் இவர்.