‘வீட்டில் தமிழ்ப் பத்திரிகைகள் வாங்குவது அவசியமே’ என்பது உள்ளிட்ட சுவாரசியமான தலைப்புகளில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.
தமிழ்மொழி விழாவையொட்டி, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் படைக்கும் மூன்று அங்கங்கள் கொண்ட விழாவின் ஒரு பகுதியாக இந்தப் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், உயர்நிலை 1, 2 மாணவர்கள் தமிழ்ப் பத்திரிகைகளின் தேவை குறித்துப் பேசினர்.
இரண்டாம் பிரிவான உயர்நிலை 3, 4 மாணவர்கள் ‘தாய்மொழிக் கல்விக்கான நம் முயற்சிகள் போதுமானதா?’ எனும் தலைப்பில் உரையாற்றினர்.
மூன்றாம் பிரிவில், பலதுறைத் தொழிற்கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ‘நாளைய பற்றி அதிகம் சிந்திப்பது ஆண்களா? பெண்களா? எனும் தலைப்பில் பேசினர்.
போட்டியின் முதல் பிரிவில் ஆக அதிக மாணவர்கள் கலந்துகொண்டது நம்பிக்கையூட்டியதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
கிட்டத்தட்ட 100 மாணவர்கள் பங்குபெற்ற இப்போட்டிக்கு தமிழாசிரியர்கள், முனைவர் திரு முகமது சரீஃப், திரு மா. அர்ஜுனன், திரு யூசுப் ரஜித் ஆகியோர் நடுவர்களாகச் செயலாற்றினர்.
மூன்று அங்கங்கள் கொண்ட விழாவின் முதல் அங்கமான பயிலரங்கு மார்ச் மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. அதில் மாணவர்களுக்கான மேடைப்பேச்சு குறித்த விளக்கங்களும் குறிப்புகளும் தரப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
பயிலரங்கை பன்முகக் கலைஞரும் வழக்கறிஞருமான திரு வடிவழகன், முனைவர் முகமது சரீஃப் ஆகியோர் வழிநடத்தினர்.
பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் நான்கு பேரும், ஏப்ரல் 18ஆம் தேதி வடிவழகன் தலைமையில் நடைபெறவிருக்கும் பட்டிமன்றத்தில் பேசுவார்கள்.

