ஊடகத் துறை அல்லது தமிழ் சார்ந்த துறைகளில் மேற்படிப்பு பயில விரும்புவோருக்காக புதிய உபகாரச் சம்பளம் ஒன்று அறிமுகம் கண்டுள்ளது.
தமிழ் முரசும் சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையும் (எஸ்ஐஇடி) இணைந்து வழங்கும் இந்த உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
உபகாரச் சம்பளம் பெறுவோருக்குக் கிடைக்கும் அனுகூலங்கள்:
- மாணவர்களின் கல்வி தேர்ச்சி, அவர்கள் பட்டம் பெறுவது, படிப்பு முடித்த பின் செய்யும் தொழில் போன்றவற்றின் அடிப்படையில் முழுத் தொகையில் அதிகபட்சம் 20 விழுக்காடு வரை மானியம் வழங்கப்படும்.
- மீதமுள்ள தொகை ஒரு கடனாக வழங்கப்படும்.
- தற்போதைய சராசரி குடும்ப வருமானத்தின் அடிப்படையில், ‘எஸ்ஐஇடி’ நிதியுதவி அளிக்கும்.
- தகுதி அடிப்படையில், தமிழ் முரசு பரிந்துரைக்கும் மாணவர்களுக்கு இதில் கூடுதல் நீக்குபோக்கு வழங்கப்படும்.
- முழுமையான உபகாரச் சம்பளத்தைப் பெறும் மாணவர்களுக்குப் படிப்பு முடித்த பிறகு, தமிழ் ஊடகத் துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட காலத்திற்குப் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்.
- தொடர்ச்சியான கல்வித் தேர்ச்சியைப் பொறுத்து, உதவித் தொகை கல்வி நிலையங்களுக்கு நேரடியாகக் கொடுக்கப்படும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
- மேல்நிலை வகுப்பில் பயின்று ‘ஏ’ நிலைத் தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள்
- ஊடகத் துறையிலும், அதைச் சார்ந்த மற்ற துறைகளிலும் பட்டயம் அல்லது பட்டம் பெற விரும்புவோர் (எ.கா. தகவல் தொடர்பு, மின்னிலக்க ஊடகம், வடிவமைப்பு, சமூகவியல், கல்வி)
- தற்போது ஊடகப் பிரிவில் பணிபுரியும் செய்தியாளர்கள் அல்லது ஊடகத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள்
- முதல் முறையாக விண்ணப்பிப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும், குறிப்பாக, முதல்முறையாகப் பட்டப்படிப்பை அல்லது பட்டய படிப்பை மேற்கொள்ளவிரும்புவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்
- தமிழ் மொழிப் படிப்புகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ் மொழிக்குத் தொடர்புடைய பிரிவுகளிலும் மேற்படிப்பு பயில்வோர் விண்ணப்பிக்கலாம்
தமிழ் முரசு, ‘எஸ்ஐஇடி’ அடங்கிய குழு விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும்.
உபகாரச் சம்பளத்தில் விருப்பமுள்ளோர் https://srm.siet.sg/Online/Default.aspx எனும் இணையத்தளத்தை நாடி, அதில் உள்ள ‘எஸ்ஐஇடி கல்வி கடன்’ கீழ் தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க, ஜூன் மாதப் பிற்பகுதிவரை காலஅவகாசம் உண்டு.

