நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஶ்ரீ நாராயண மிஷனிலும் ஜாமியா முதியோர் இல்லத்திலும் உள்ள மூத்தோர் புதிய சக்கர நாற்காலிகளைப் பெற்றுக்கொண்டனர்.
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் இரண்டு பராமரிப்பு இல்லங்களுக்கும் 10 சக்கர நாற்காலிகளை வழங்கியது.
கொவிட்-19 காலகட்டத்தில் பராமரிப்பு இல்லங்களுக்குச் சென்றபோது மூத்தோருக்குரிய சக்கர நாற்காலிகளுக்கான தேவை இருந்ததை ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் அறிந்தது.
“மூத்தோர் பயன்படுத்திய சக்கர நாற்காலிகள் நாளடைவில் பழுதடையலாம். சில சக்கர நாற்காலிகள் உடைந்தும் போகலாம். எனவே, புதிய சக்கர நாற்காலிகள் நிச்சயம் அவர்களுக்கு உதவும்,” என்றார் சங்கத்தின் தலைவர் முனைவர் மு.அ.காதர்.
ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கிவரும் சங்கம், இந்த முறை ஶ்ரீ நாராயண மிஷனுக்கும் ஜாமியா முதியோர் இல்லத்துக்கும் உதவ முடிவெடுத்தது.
பென்கூலன் பள்ளிவாசலில் மார்ச் 8ஆம் தேதி நடைபெற்ற நோன்புத் துறப்பு நல்லிணக்க நிகழ்ச்சியில் பராமரிப்பு இல்லங்களின் பிரதிநிதிகள் சக்கர நாற்காலிகளைப் பெற்றுக்கொண்டனர்.
“மூத்தோர், சக்கர நாற்காலியைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். நடப்பதற்குச் சிரமப்படும் மூத்தோர் புதிய சக்கர நாற்காலியால் மகிழ்ச்சியடைந்தனர்,” என்றார் ஜாமியா சிங்கப்பூர் அறநிறுவன சமய நல்லிணக்கப் பணி மூத்த இயக்குநர் முனைவர் எச்.முஹம்மது சலீம்.
மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தென்கிழக்கு வட்டார மேயருமான முகம்மது ஃபாமி அலிமான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.