சென்னை: மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 11 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமாகக் கூறப்படும், ‘கோல்டிரிஃப்’ இருமல் மருந்தின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘கோல்ட்ரிப்’ மருந்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், ‘கோல்டிரிஃப்’ மருந்து தயாரிப்பு உரிமத்தை ரத்து செய்வதற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில், ஒன்று முதல் ஏழு வயது வரை உள்ள ஆறு குழந்தைகள், 15 நாள்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன.
உயிரிழப்புக்குக் காரணம் சிறுநீரகச் செயலிழப்பு என்று தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்டிரிஃப்’ மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட ‘நெக்ஸ்ட்ரோ டி.எஸ்.’மருந்து ஆகிய இருவேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது தெரியவந்தது.
அந்தக் குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் ‘டை எத்திலீன் கிளைக்கால்’ எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்ததும் தெரியவந்தது. ‘
சாயம், மை’போன்ற பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, பலதுறை விசாரணைக் குழுவை மத்திய அரசும், மத்தியப் பிரதேச அரசுகளும் அமைத்துள்ளன.
இதனிடையே, மத்தியப்பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, காஞ்சிபுரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பார்மாவில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’மருந்தைச் சோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தது.
இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த இரு நாள்களாகச் சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டது.
அப்போது, அங்கிருந்த ‘கோல்டிரிஃப்’ உட்பட ஐந்து மருந்துகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
இதில், மற்ற மருந்துகளில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய காரணிகள் இல்லை. அதேநேரம், ‘கோல்டிரிஃப்’ மருந்தில், ‘டைஎத்திலீன் கிளைக்கால்’ என்ற வேதிப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது.
மேலும் மத்திய அரசின் மருத்துவ ஆய்வுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது. அதனால், மறு உத்தரவு வரும் வரை உற்பத்தி மற்றும் அம்மருந்தின் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் இறப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் ஓர் ஆலோசனையை வெளியிட்டு, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளைப் பரிந்துரைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.