சென்னை: வெளிநாடுகளில் குடியுரிமைப் பெற்ற சிலர், தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்திருப்பது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
அண்மையில் நடந்துமுடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் முன்னெப்போதையும்விட அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
இம்முறை வெளிநாடுகளில் நிரந்தரமாகத் தங்கும் அனுமதி பெற்றவர்களும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து பிற நாடுகளின் குடியுரிமையைப் பெற்றவர்களும்கூட தமிழகத்திற்குச் சென்று வாக்களித்ததாகக் கூறப்பட்டது.
பலர் தாங்கள் வாக்களித்ததைக் கொண்டாடும் வகையில், வாக்குச்சாவடிமுன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
எனினும், இந்தியக் குடிமக்கள் மட்டுமே இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க முடியும். வெளிநாடுகளில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதோடு, அந்நாட்டு குடிமக்களாகவும் மாறிவிட்டால், அவர்களுடைய இந்தியக் கடப்பிதழ் ரத்து செய்யப்படும். ஆனால், இந்தியாவுக்கு வழக்கம்போல் சென்று போவதில் எந்தச் சிக்கலும் இருக்காது.
இந்நிலையில், வெளிநாடுகளில் குடியுரிமைப் பெற்ற பலர் தமிழகத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். சட்டப்படி, அது குற்றம் என்பதால் வாக்களித்தவர்கள் இந்தியாவில் இருந்து புறப்பட்டபோது, அடையாளம் காணப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி குடியுரிமை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, வாக்களிக்கத் தகுதி பெறாத, வெளிநாடுவாழ் தமிழர்கள் வாக்களித்ததற்கான அடையாள மையுடன் அதிகாரிகளிடம் சிக்கினர்.
தொடர்புடைய செய்திகள்
ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
அவர்கள் அனைவரும் இணையம்வழி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று அதை வைத்து வாக்களித்தது தெரியவந்துள்ளது.

