கொல்லம்: பதினாறு வயதுப் பையனைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சந்தேகத்தின்பேரில் 19 வயதுப் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீகுட்டி என்ற அந்த இளம்பெண் இந்தியாவின் கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்தவர்.
பரணிக்காவு பகுதியில் தன் பெற்றோருடன் வசித்துவந்த அச்சிறுவனை ஆசைகாட்டி, அவனை ஸ்ரீகுட்டி பல இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து அவரது பாலியல் அத்துமீறல் தொடங்கியது.
ஸ்ரீகுட்டிக்கு இன்னொருவருடன் தொடர்பு இருந்ததால் அவரது பெற்றோர் அவரை அச்சிறுவனின் வீட்டில் விட்டுச்சென்றதாகச் சொல்லப்படுகிறது.
அச்சிறுவனின் வீட்டில் தங்கிய ஸ்ரீகுட்டி, அவனை மைசூரு, பாலக்காடு, பழனி, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, அங்கெல்லாம் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
அதனால், ஸ்ரீகுட்டிமீது அந்தப் பையனின் தாயார் புகார் அளித்தார்.
வியாழக்கிழமை (டிசம்பர் 26) காலையில் பத்தனம்திட்டா பேருந்து நிலையத்தில் ஸ்ரீகுட்டியும் அச்சிறுவனும் இருந்தது தெரியவந்தது. அதனையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை ஸ்ரீகுட்டியைக் கைதுசெய்தது. அவரை விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.