புதுடெல்லி: மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான், இஸ்ரேல் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் தொடுத்துள்ளதால் மத்திய கிழக்கில் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது.
இதையடுத்து, வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இந்திய அரசாங்கம் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்பட்டு அவற்றின் மூலம் பல இந்தியர்கள் நாடு திரும்பும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சின் வளைகுடாப் பிரிவு இணைச் செயலாளர் அஸீம் மகாஜன், கடந்த பிப்ரவரி 28 முதல் 2.8 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் திரும்பியதாகக் குறிப்பிட்டார்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இருந்து மேலும் பல விமானங்கள் இயக்கப்படும் என்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார் அவர்.
மேலும், ‘எம்டி சேஃப் சீ விஷ்ணு’ கப்பலில் உள்ள 15 இந்திய ஊழியர்கள் விரைவில் இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அஸீம் மகாஜன் கூறினார்.
முன்னதாக, அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அவற்றின் முக்கியமான கட்டமைப்புகள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

