மும்பை: மராட்டிய மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத்தில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு ஊழியர்கள் சிலர் தொழிற்சாலை வளாகத்திலேயே உறங்கியுள்ளனர்.
இந்நிலையில் அங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனத் தொழிற்சாலையின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியது. இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் உறங்கி கொண்டிருந்த ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர்.
தீ விபத்துக் குறித்துத் தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்துவந்த தீயணைப்புப்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொழிற்சாலைக்குள் சிக்கிய ஊழியர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொழிற்சாலைக்குள் சிக்கியிருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
இதில் படுகாயமடைந்த ஊழியர்களில் அறுவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து அம்மாவட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.