லக்னோ: மகா கும்பமேளா நிகழ்வுக்கான மொத்தச் செலவு ரூ.7,500 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 1882 ஆம் ஆண்டு நடைபெற்ற மகா கும்ப மேளாவுக்கு ரூ.20,000 மட்டுமே செலவானதும் தெரிய வந்துள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு சென்று வருவதை இந்துக்கள் புனித யாத்திரையாக கருதுகின்றனர்.
கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி ஆகிய நான்கு நதிகளின் கரையோரங்களில் அமைந்துள்ள புனித தலங்களில் மகா கும்பமேளா நடைபெறும்.
இதற்காக கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து, தங்கும் வசதிகள் உள்ளிட்ட அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் செய்யப்படுவது வழக்கம்.
கடந்த 1918ஆம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவில் 30 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள கும்ப மேளாவில் ஏறக்குறைய 40 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ரூ.7,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
“மகா கும்பமேளா எப்போது நடைபெறும் என்பது குறித்து பெரிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படுவதில்லை. பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ள விவரங்களை வைத்து பொது மக்கள் வந்து செல்வர்,” என்று வரலாற்றுப் பேராசிரியர் யோகேஷ்வர் திவாரி தெரிவித்துள்ளார்.