இறுதிச் சுற்றுப்பாதையில் ‘ஆதித்யா’; மோடி பாராட்டு

இறுதிச் சுற்றுப்பாதையில் ‘ஆதித்யா’; மோடி பாராட்டு

2 mins read
2bc86645-8e22-4ecc-9586-76cec235ba06
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி எக்ஸ்எல் சி57 உந்துகணை மூலம், ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. - கோப்புப்படம்: ஃபேஸ்புக் / இஸ்ரோ
Google News Preferred Icon

புதுடெல்லி: சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா விண்ணுக்கு அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம்,125 நாள்கள் பயணத்திற்கு பிறகு தனது இறுதிச் சுற்றுப்பாதையில் சனிக்கிழமை (டிசம்பர் 6) மாலை நிலைநிறுத்தப்பட்டது.

அந்த விண்கலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் என்று இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இந்திய விண்வெளி ஆய்வாளர்களின் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

“இந்தியா இன்னுமொரு முக்கியச் சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவின் முதலாவது சூரிய ஆய்வு விண்கலம் ஆதித்யா-எல்1 தனது இறுதி இலக்கை அடைந்துள்ளது. இந்திய அறிவியலாளர்களின் தளர்விலா அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்று. இந்த அரிய சாதனையை இந்திய மக்களுடன் சேர்ந்து பாராட்டுகிறேன்,” என்று தமது வாழ்த்துப் பதிவில் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் பணியில் இஸ்ரோ களமிறங்கியுள்ளது.

அவ்வகையில், கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி எக்ஸ்எல் சி57 உந்துகணை மூலம், ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அதன் சுற்றுப்பாதையை உயர்த்துவதற்காக இதுவரை விஞ்ஞானிகள் நான்கு கட்டப் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

சூரியனை பூமி சுற்றி வரும்போது, அதற்கேற்ப சூரியனை ஆதித்யா விண்கலமும் பின்தொடரும் வகையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, சூரியனில் ஏற்படும் மாற்றங்கள், அதனால் நிகழும் விளைவுகளை முன்கூட்டியே பூமியில் இருந்து அறிய முடியும் என்று அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே சூரியனின் முழு வட்டுப் படங்களை ஆதித்யா விண்கலம் அனுப்பி உள்ளது. தொடர்ந்து அறிவியல் சோதனைகளுக்காக சூரியனின் பல்வேறு கோணங்களின் படங்களையும் ஆதித்யா விண்கலம் அனுப்ப உள்ளது. இதனால், விண்வெளியில் உலவும் செயற்கைக்கோள்களைப் பல்வேறு பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற முடியும் என்று அறிவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்